திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அர்ச்சனையை முடித்துவிட்டு பிரகாரத்தை சுற்றிக்கொண்டிருந்த பவித்ரா தன் கோபத்தை அடக்க மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தாள். காலை 6 மணிக்கு கோவிலுக்கு வருவதாக சொன்ன சங்கர் இன்னும் வந்து சேரவில்லை. கோவிலில் கோபப்படக்கூடாது என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டே கோவிலை சுற்றிக்கொண்டிருந்தாள்.
சங்கர் வர்றதுக்குள்ள இவங்களை பத்தி ஒரு சின்ன இண்ட்ரோ.. சங்கரும் பவித்ராவும் ஒரே அலுவலகத்தில் கடந்த மூன்று வருடமாய் காதல் செய்து வருகிறார்கள். அட ஆமாங்க. அலுவலகத்துல இவங்க வேலை செய்யறதை விட காதல் செய்யற நேரம் தான் அதிகம். சங்கர் வீட்டிற்கு ஒரே பிள்ளை. பிள்ளையின் ஆசையே பெற்றோரின் ஆசைன்னு அவங்களும் இவங்க காதலுக்கு பச்சை கொடி காட்டிட்டாங்க. பவித்ரா...
அட இதோ சங்கர் வந்துட்டான். இனி இங்க நடக்கறத நீங்க பாருங்க. நான் கேப் கிடைக்கறப்போ வந்து இண்ட்ரோவ கண்டினியூ பண்றேன்.
தன் முன் வந்து நின்ற சங்கரை முறைத்துவிட்டு எதுவும் பேசாமல் ஒரு தூணின் அருகே சென்று அமர்ந்தாள் பவித்ரா. சங்கர் கிடைத்த சந்தர்ப்பத்தில் சந்நிதி சென்று கடவுளுக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு வந்து அவளுடன் அமர்ந்தான்.
"சாரி சாரி சாரி" வழக்கம் போல் சங்கர் தான் மௌனத்தை கலைத்தான்.
"பேசாத நீ. நான் என்ன எனக்காகவா கோவிலுக்கு வர சொன்னேன். உன் பிறந்தநாளுக்கு உனக்காக அர்ச்சனை பண்றப்போ நீ கூட இருந்தா நல்லா இருக்கும்னு தானே வர சொன்னேன். அதுக்கு கூட இப்படி லேட்டா வந்தா என்ன அர்த்தம்?"
"உனக்கு ஒண்ணு தெரியுமா?"
"என்ன?"
"நமக்காக நாம வேண்டிக்கறதை விட அடுத்தவங்களுக்காக நாம வேண்டிக்கிட்டா அதுக்கு பலன் அதிகம்?"
"இப்ப என்ன சொல்ல வர்ற நீ?"
"எனக்காக நான் வந்து வேண்டிக்கறதை விட நான் நல்லா இருக்கணும்னு நினைக்கற நீ எனக்காக வேண்டிக்கிட்டா அதுக்கு பலன் அதிகம். அதுக்கப்புறம் நான் எதுக்கு தனியா வேண்டிக்கணும்" என்று கேட்டவாறே அவளை பார்த்து கண்சிமிட்டினான் சங்கர்.
சற்றே யோசனையுடன், "வியாக்கியானம் எல்லாம் நல்லாதான் இருக்கு. அப்படினா நான் வேண்டினது கண்டிப்பா பலிக்குமா?" என்று வினவினாள் பவித்ரா
"நிச்சயமா"
"அப்பாடா இப்போ தான் சந்தோஷமா இருக்கு. எதுக்கும் இன்னிக்கு கொஞ்சம் நிறைய சாப்பிட்டு தெம்பா இரு நீ"
என்ன சொல்கிறாள் என்று புரியாத குழப்பத்துடன், "புரியலியே. அப்படி என்ன வேண்டிக்கிட்ட?"
"ஹிஹி.. நீ சொன்ன நேரத்துக்கு கோவிலுக்கு வராததால உனக்கு இன்னிக்கு நல்லா நாலு தர்ம அடி விழணும்னு வேண்டிக்கிட்டேன்"
மேலே பார்த்தவாறு இரு கரங்களை கூப்பி "ரொம்ப நன்றி பெருமாளே" என்றான் சங்கர்.
இப்பொழுது புரியாமல் விழிப்பது பவித்ராவின் முறையாயிற்று. "எதுக்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்ற நீ? கம்மியா வேண்டிக்கிட்டேன்னா? ஒரு வேளை 108 இல்ல 1008னு வேண்டியிருக்கணுமோ?"
"அடிப்பாவி.. அதுக்கு இல்லை. எப்பவுமே வேண்டுதலை வெளியில சொன்னா அது பலிக்காதுன்னு சொல்லுவாங்க. அப்படினா இப்போ நீ வேண்டிக்கிட்டதும் பலிக்காதில்ல.. அதான்." என்றான் கூலாக.
"அப்படியா.. பலிக்குதா இல்லையானு பாத்துடலாம்" என்றவாறே அவனை அடிப்பது போல் சைகையுடன் அவள் எழ
"ஹே.. பொறந்தநாள் அதுவுமா ஒரு அப்பாவி புள்ளைய அடிச்ச பாவம் உனக்கு வேணாம். சரி சரி மொறைக்காத. நேரமாச்சு கிளம்பலாம் வா. அம்மா உன்னை அப்படியே வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னாங்க"
"இப்பவா? இப்ப வீட்டுக்கு வந்துட்டு வந்தா ஆபீஸுக்கு லேட் ஆகிடுமே. சாயந்திரம் வரட்டுமா?"
"ஆபீஸா? அதெல்லாம் இன்னிக்கு போக வேண்டாம். உனக்கும் சேத்து நானே நேத்து லீவ் சொல்லிட்டேன். இன்னிக்கு ஃபுல்லா ஐயா கூட தான் நீ இருக்க போற" கூறிக்கொண்டே அவன் வண்டியை நோக்கி செல்ல, எதுவும் சொல்லத்தோன்றாமல் அவளும் அவன் பின்னால் நடந்தாள்.
வீட்டு வாசலில் இறங்கியதும் "ஒரு நிமிஷம்" என்று அவளிடம் சொல்லிவிட்டு வீட்டு வாசலில் சென்று நின்று "வாருங்கள் மகாராணி" என்று சேவகன் போல் சிரம் தாழ்த்தி அவளை வரவேற்க, அதை பார்த்து கொண்டிருந்த அவன் அம்மா புன்னகையுடன் "வாம்மா. நல்லா இருக்கியா?" என்று வாஞ்சையுடன் வரவேற்றார்.
"நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?" என்று கேட்டவாரே அவளும் வீட்டில் நுழைந்தாள்.
"நானும் நல்லா இருக்கேன்மா. என் புள்ளை இப்படி எல்லாம் பண்றானேனு பாத்து ஏமாந்துடாதமா. என் புள்ள ஐஸ் வைக்கறதுல கில்லாடி. நாம உஷாரா இல்லைன்னா தலைல மொளகாய் அரைச்சிட்டு அவனுக்கு ஆகவேண்டிய காரியத்தை சாதிச்சுக்குவான்".
"போச்சுடா மாமியாரும் மருமகளும் இப்பவே ஒண்ணு கூடிட்டீங்களா? கல்யாணத்துக்கப்புறம் என் கதி அதோ கதி தான் போல. அப்பா எங்கிருந்தாலும் உடனே உங்கள் பிள்ளையின் உதவிக்கு வரவும்" என்று உரக்க கத்தினான் சங்கர்.
அதை பார்த்து புன்னகைத்தவாறே அவன் தாய் "உங்கப்பா கார் இன்னும் வரலியே. ஏன்னு விசாரிச்சிட்டு வர்றேன்னு ட்ராவல்ஸ் வரைக்கும் போயிருக்காரு" என்றாள்
"ஏம்மா? எங்கயாவது வெளியில கிளம்பறீங்களா?" என்று கேட்டாள் பவித்ரா
"இவன் ஒண்ணும் சொல்லலியாமா உன்கிட்ட? இன்னிக்கு நாள் நல்லா இருக்கு. அதான் இன்னிக்கே உனக்கு கல்யாணப்புடவை எடுக்க காஞ்சிபுரம் போகலாம்னு சொல்லியிருந்தேன். கூட்டிட்டு வரப்போ அதை சொல்லலியா இவன்?"
"ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான்மா சொல்லலை நான்"
இவங்கள விட்டா பேசிக்கிட்டே இருப்பாங்க.. அப்புறம் கதை முடியற வரை நான் பவித்ரா பத்தி இண்ட்ரோ குடுக்காமலே விட்டுடுவேன் போல இருக்கு. அதனால இங்க நடுவுல புகுந்து என் வேலையை முடிச்சிடறேன். பவித்ராவுக்குனு குடும்பம் எதுவும் கிடையாதுங்க. அவளுக்கு இந்த அன்பு, பாசம், அக்கறை எல்லாம் புதுசு. தாய் தந்தை யாரென்றே அறியாமல் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து, ஒரு நல்லவரின் ஸ்பான்சர்ஷிப்பின் உதவியால் பட்டப்படிப்பு முடித்து மூன்று ஆண்டுகளுக்கு முன் சங்கர் வேலை செய்யும் அதே அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தவள் தான் பவித்ரா. அலுவலகத்தில் கிடைத்த சங்கரின் நட்பு காலப்போக்கில் காதலாய் மாறினாலும் அவளுக்குள் ஒரு அச்சம் இருக்கவே செய்தது. சங்கரின் குடும்பத்தில் சொந்த ஊர் எது என்று கூட அறியாத தன்னை மருமகளாய் ஏற்றுக்கொள்வார்களா என்று. ஆனால் முதல் முறை சங்கர் அவன் வீட்டிற்கு அழைத்து சென்ற போது அவர்கள் எந்த தயக்கமும் இன்றி முழுமனதுடன் அவளை வரவேற்றது அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அதை அவள் வாய்விட்டு கேட்கவும், அவர்கள் சிரித்து கொண்டே "எங்க பையனோட சந்தோஷம் தான்மா எங்களுக்கு முக்கியம். அவன் தேர்ந்தெடுத்த பொண்ணு நீ நல்ல குணவதியா இருக்கறப்போ எங்களுக்கு வேற எதுவுமே குறையாய் தெரியலை" என்று கூறி அவளை சமாதானப்படுத்தினார்கள். சரி இப்போ பேக் டூ கதை.
சங்கரின் அப்பா காருடன் வந்து சேரவும் நால்வரும் கிளம்பி சென்று காஞ்சிபுரத்தில் ஷாப்பிங் எல்லாம் முடித்துவிட்டு கோவிலுக்கு சென்று தரிசனங்கள் முடித்துக்கொண்டு வீடு திரும்ப இரவு ஆகிவிட்டது. சங்கர் பவித்ராவை அவள் தங்கியிருக்கும் ஹாஸ்டலில் இறக்கிவிட்டுவிட்டு,
"பிறந்தநாள் அதுவுமா எனக்கு எதுவும் பரிசு இல்லையா?" என்று ஆர்வமாக கேட்டான்.
தான் பரிசாக குடுத்த சட்டையை தானே அணிந்திருக்கிறான். இன்னும் என்ன பரிசு என்று குழப்பத்துடன் அவள் விழிக்க...
அவன் கன்னத்தை காட்டி "ஒண்ணே ஒண்ணு" என்று கேட்டான்.
அவன் நோக்கம் புரிந்து "காலைல வேண்டுதல் பலிக்காதுனு சொன்னியே இப்போ பலிக்கப்போகுது பாரு" என்று கையை ஓங்க, அவன் "போடி" என்று கூறிவிட்டு பைக்கை விருட்டென்று கிளப்பினான்.
*** முற்றும் ***