காதலிக்க நேரமில்லை...

என்னைத் தேடி காதெலென்ற வார்த்தையனுப்பு
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தியனுப்பு..

என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டுவரத் தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லியனுப்பு..

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்துக் கொள்கிறேன்

கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னைத் தேடி காதெலென்ற வார்த்தையனுப்பு
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தியனுப்பு..

யாரோ உன் காதலில் வாழ்வது
யாரோ உன் கனவினில் நிறைவது
யாரோ என் சலனங்கள் தீர்த்திட வாராயோ..

ஏனோ என் இரவுகள் நீள்வது
ஏனோ ஒரு பகல் என சுடுவது
ஏனோ என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ..

காதல்தர நெஞ்சம் காத்து இருக்கு காதலிக்க அங்கு நேரமில்லையா?
இலையைப் போல் என் இதயம் தவறி விழுதே...

என்னைத் தேடி காதெலென்ற வார்த்தையனுப்பு
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தியனுப்பு..

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசிச் செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்துக் கொள்கிறேன்

விஜய் டீ.வி.ல வர்ற காதலிக்க நேரமில்லைங்கற புது சீரியலோட டைட்டில் சாங் இது. பாடலை கேட்க இங்க போங்க. பேக்கிரவுண்ட்ல பாட்டு ஓடும் ;))

இந்த வார கும்மி..

மக்களே, இந்த வாரம் நம்மள வலைச்சரத்தோட ஆசிரியரா இருக்க சொல்லிட்டதால கும்மி லொகேஷன தற்காலிகமா அங்க மாத்தியாச்சு. எல்லாரும் அங்க வந்துடுங்க ;))

என்றும் நட்புடன்,
ஜி3.

அவள் டைரியிலிருந்து சில குறிப்புகள்.. - II

மு.கு. : இவ்வளவு தாமதமா 2-வது பகுதி எழுதினதுக்கு மொதல்ல ஒரு மன்னிப்பு கேட்டுக்கறேன்.

முதல் பகுதி

அக்டோபர் 15, 2006.

நேற்றிரவும் அவன் என் கனவில் வந்தான். என் வீட்டில் ஏதோ விசேஷம். அவனை எல்லோரும் அதிக மரியாதையுடனும், பாசத்துடனும் நடத்துகிறார்கள். அவனும் உரிமையுடன் என் வீட்டினுள் வலம் வருகிறான். விசேஷத்திற்கு நான் எந்த புடவையை கட்டவேண்டும் என்பது உட்பட அவன் அபிப்ராயம் கேட்கப்படுகிறது. விழித்து எழுகையில் இவை மட்டுமே நினைவில் இருந்தது. இப்பொழுதெல்லாம் அடிக்கடி அவனைப்பற்றிய கனவுகள் வருகிறது. எனக்குள் பல கேள்விகளை எழுப்புகின்றன இந்த கனவுகள். விடைகளைத்தேடி களைத்துப்போகிறேன். அவனைப்பற்றி நினைப்பதை நிறுத்த வேண்டும் என்று மூளைக்கு தெரிகிறது. ஆனால் மனதிற்கு? பகல் பொழுதுகளில் வேறு வேலைகளில் மனதை திசை திருப்ப என்னால் முயற்சி செய்ய முடியும். ஆனால் கனவுகளில் வருபவனை நான் எப்படி தவிர்ப்பது?


அக்டோபர் 18, 2006.

நேற்று ஒரு புத்தகத்தில் படித்தேன். மிகுந்த அசதியில் தூங்குபவர்கள் ஆழ்ந்த தூக்கம் தூங்குவார்களாம். அவர்களுக்கு அந்நிலையில் கனவுகள் தோன்றாதாம். முயற்சி செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. அதனால் நேற்று இரவு உணவு முடிந்ததும் மொட்டைமாடியில் காதில் வாக்மேனுடன் உடல் சோர்வுறும் வரை நடந்தேன். இறுதியில் இதற்கு மேல் முடியாது என்று உடல் மறுத்த நிலையில் உறங்க சென்றேன். வந்து படுத்தது தான் தெரியும். காலையில் எழுகையில் தான் நான் அடித்து போட்டது போல் உறங்கியது உரைத்தது. உடல் சற்று சோர்ந்திருந்தாலும் அவனைப் பற்றிய நினைவை ஒதுக்க முடிந்ததில் ஒரு உற்சாகத்துடனே நாளை துவக்கினேன். இன்றைய பொழுது இனிமையாகவே கழிந்தது. இனி தினமும் இதையே தொடரவேண்டும்.


நவம்பர் 2, 2006.

அலுவலகத்தில் என்னை பயிற்சிக்காக France நாட்டிற்கு செல்ல முடியுமா என்று கேட்டார்கள். ஒரு குழுவாக நாங்கள் 8 பேர் செல்வதால் பாதுகாப்பை பற்றி கவலை இருக்காது என்றார்கள். வருபவர்களில் பாதி பேர் என் நன்பர்கள் என்பதால் நானும் சரியென்று கூறிவிட்டேன். வீட்டில் என்ன சொல்வார்களோ என்று பயமாக இருந்த்து. "3 மாதம் தானே, அவளுக்கும் ஒரு நல்ல அனுபவமாய் இருக்கும் போய் வரட்டும் "என்று அம்மாவை அப்பா சமாதானப்படுத்தியது மனதிற்கு இதமாய் இருந்தது. மகளை பொத்தி பாதுகாக்க நினைக்கும் தாய், என் மேல் என்னை விட அதிகம் நம்பிக்கை வைத்திருக்கும் தந்தை, இவ்வளவு அழகான குடும்பத்தை பெற என்ன தவம் செய்தேனோ?


பிப்ரவரி 10, 2007.

மூன்று மாத இடைவெளிக்கு பின் வந்ததில் வீட்டில் ஏகப்பட்ட உபசரிப்பு. ராஜ மரியாதை தான். உண்மையிலேயே அப்பா சொன்னது போல் நல்ல அனுபவமாகத்தான் அமைந்தது. நண்பர்களே குடும்பமாய், ஒருவருக்கு ஒருவர் துணையாய், ஆறுதலாய்.. சிறு சிறு சண்டைகள், ஊர் சுற்றல்கள், கூட்டாஞ்சோறு சமையல் என்று விடுமுறைகள் எல்லாம் அமர்களப்பட்டது. அலுவலகத்திலும் ஒழுங்காக பயிற்சியை முடித்து அங்கும் நல்ல பெயரை சம்பாதித்துக்கொண்டாயிற்று. வாழ்வே சந்தோஷமயமாய் தோன்றுகிறது.


ஜீன் 15, 2007.

வீட்டில சல்லடை போட்டு தேடி எனக்கான மாப்பிள்ளையை கண்டுபிடித்துவிட்டார்கள். பெயர் பிரவாகன். ஜாதகம் எல்லாம் பொருந்திவிட்டதாம். இரண்டு பக்கங்களிலும் பெரியவர்களுக்கு சம்மதம். இனி நானும் அவரும் தான் முடிவை சொல்ல வேண்டுமாம். "வெறும் புகைப்படத்தைப் பார்த்து ஒருவரை பிடித்திருக்கு என்றோ பிடிக்கவில்லை என்றோ எப்படி சொல்வது என்று எனக்கு புரியவில்லை" என்றதும், அம்மா "அவரும் இதைத்தான் சொன்னார்" என்றும், முடிவெடுக்கும் முன் என்னுடன் பேச வேண்டும் என்று கூறியதாகவும் சொன்னார்கள். சரி என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என்று நானும் நாளை மாலை சந்திக்க சம்மதம் சொல்லிவிட்டேன்.


ஜீன் 16, 2007.

இன்று மாலை அவரை காபி ஷாப்பில் சந்தித்தேன். ஒரு புன்னகையுடன் வரவேற்று சகஜமாய் பேசினார். ஒருவருக்கு மற்றொருவரை பிடித்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் இருவருமே இயல்பாய் உரையாட முடிந்தது. பொதுப்படையாக ஆரம்பித்த பேச்சு குடும்பம், படிப்பு, வேலை, பிற்கால திட்டங்கள் என்று தடம் மாறியது. முடிவில் கைகுலுக்கி பிரிகையில் அவர் மீது காதல் மழை பொழிய ஆரம்பித்துவிடவில்லை என்றாலும் அவரைப்பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் தோன்றி இருந்தது உணமை. வீட்டில் நுழைந்ததும் பார்வையாலேயே கேள்விகேட்ட அம்மாவிடம் அவருக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் என்று சொன்னதும் அம்மாவின் முகத்தில்தான் எத்தனை சந்தோஷம். அந்த பக்கத்தில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்று தெரியவில்லை.


ஜீன் 17, 2007.

பிரவாகனின் வீட்டிலிருந்து அவருக்கும் இதில் சம்மதம் என்று தெரியவர வீடே கல்யாண கோலம் பூண ஆரம்பித்தது. என்னால் தான் அதில் முழுமையாய் ஈடுபட முடியவில்லை. மனதில் ஒரு சிறு குழப்பம். என் முந்தைய காதலைப்பற்றி அவரிடம் சொல்லவேண்டுமா வேண்டாமா? அதை சொல்லாமல் விட்டால் அது நான் அவருக்கு செய்யும் துரோகமா? ஆனாலும் இத்தனை காலம் பழகிய நண்பர்களிடம் கூட சொல்லாமல் மறைத்த ஒரு விஷயத்தை ஒரே ஒரு முறை மட்டும் சந்தித்து பேசியவரிடம் எப்படி கூறுவது? அவர் மற்றவர்களைப் போல் இல்லை. என் வாழ்வின் சரி பாதி என்றாலும் அதை முடிவெடுத்த ஒரே நாளில் அந்த அளவிற்கு மனங்கள் நெருங்கிவிடுவதில்லையே. என்ன செய்வேன்?


ஜீன் 24, 2007.

இன்று அவரை சந்தித்தேன். என் குழப்பங்களுக்கு விடை கண்டுபிடிக்க என்ன வழியென்று யோசித்து இறுதியில் நான் படித்த கதையில் வரும் கதாபாத்திரத்தின் நிலையென என் நிலையை விளக்கி அவரிடமே விடையை தேடினேன். என் நிலை தான் அது என்று உணர்ந்தோ என்னவோ சிறிது அழுத்தமாகவே "அவள் அந்த பழைய காதலனை மறந்து அவள் கணவனை முழு மனதுடன் ஏற்று அவனுக்காகவே வாழப்போகிறாள் என்றால் இந்த பழைய கதைகள் எல்லாம் அவள் கணவனுக்கு அவசியமே இல்லை. அப்படி சொல்வதால் வீண் மனக்கஷ்டங்கள் தானே ஒழிய வேறேதும் நடக்கப் போவதில்லை. அதுவே அவளுக்கே இந்த திருமணத்தில் விருப்பமில்லையெனில் விஷயமே வேறு" என்றார். உண்மைதானே. முடிந்த ஒன்றைப் பற்றி பேசுவதால் மனக்கஷ்டத்தை தவிர எந்தவித பயனும் இல்லை என்கையில் அதைப்பற்றி பேசாமல் இருப்பதுதான் நல்லது. ஏனோ இன்று கடற்கரையில் பார்த்த சூரிய அஸ்தமனம் என் கண்களுக்கு என் குழப்பங்களின் அஸ்தமனமாய் தோன்றியது.

***** முற்றும் *****

கவிதாயினியுடன் ஒரு தீபாவளி

நம்ம ப்ளாக் மக்கள்ல முக்கால்வாசி பேர நேர்ல பாத்தாச்சு. பாக்கி இருக்கற கொஞ்சம் பேர்ல நம்ம கவிதாயினியும் ஒருத்தி. சரி இந்த தீபாவளிக்கு அம்மணி வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிக்கலாம்னு ப்ளான் பண்ணினேன். சர்ப்ரைஸ் அவளுக்கு மட்டும் தான். அவங்கம்மாவுக்கு முன்னாடியே சொல்லிட்டேன். பின்னே, நமக்கும் சேத்து சமைக்கனுமில்ல ;-))

ஒருவழியா பஸ்ஸ புடிச்சு மதியம் 11 மணிக்கு அம்மணி வீட்டுக்கு போனா அவங்கம்மா தான் வரவேற்கறாங்க. என்ன ஆண்ட்டி கவிதாயினி எங்கன்னு கேட்டா மாடில பட்டாசு வெடிச்சிட்டிருக்காமான்னு சொல்றாங்க. என்னடா இது புஸ்வானம் மத்தாப்பு இதையெல்லாம் தானே மாடில வெடிப்பாங்க. அதை ஏன் இந்த புள்ள பட்டபகல்ல வெடிக்கபோகுதுன்னு யோசிச்சிக்கிட்டே மாடிக்கு போனேன்.அங்க பாத்தா அம்மணி ஒரு பெரிய ஒட்டடகுச்சிய கைல திருப்பி புடிச்சிக்கிட்டு எதையோ அடிச்சிக்கிட்டு இருக்கு. என்னடான்னு அப்படியே ஃபோகஸ்ஸ அந்த பக்கம் திருப்பி பாத்தா அந்த ஒட்டட குச்சியோட இன்னொரு முனைல ஒரு சுத்தியல கட்டி வெச்சிக்கிட்டு ஒரு 10 அடி தள்ளி கொட்டி வெச்சிருக்கற பொட்டு வெடிய அம்மணி ஒன்னொன்னா வெடிச்சிட்டிருக்கு. அதுக்கே கையெல்லாம் என்ன நடுக்கம் நடுங்குதுங்கறீங்க ;-))

ஆஹா.. இம்புட்டு தானா நம்ம கவிதாயினியோட வீரம்? கொலைவெறிக்கவிதை எல்லாம் போடறதால ஏதோ தைரியசாலின்னு நாம தான் தப்பா நெனைச்சுப்புட்டோமா?? சரி அவ தைரியத்துக்கு இன்னும் ஒரு டெஸ்ட் வைக்கலாம்னு அப்படியே நம்ம மொபைல்ல ஒரு பாட்ட போட, திடீர்னு கேட்ட சவுண்ட்ல பயந்து அம்மணி கைல இருந்த ஒட்டட கொம்ப போட்டுட்டு கண்ண மூடிட்டு காதை பொத்திட்டு அம்மான்னு அலறுது. என்ன ஆச்சோன்னு பதறிப்போய் ஓடி வந்த அவங்கம்மாவுக்கும் பேயறஞ்ச மாதிரி நின்ன கவிதாயினிக்கும் என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொன்னேன். கவிதாயினி உடனே "பிசாசே, இதெல்லாம் உன் வேலைதானா?" ன்னு அடிக்க வர, அவங்கம்மா "இவ எப்பதான் திருந்துவாளோ"ன்னு சொல்லிட்டு ஒரு ஏக்க பெருமூச்சோட "சாப்பாடு எடுத்து வைக்கறேன் வாங்க" ன்னு கூப்டுட்டு போயிட்டாங்க.

அப்புறம் கேட்கனுமா? நம்ம கவிதாயினி எங்க நான் சாப்பிட ஒக்காந்தா அவளுக்கு கோழிக்கால் கிடைக்காம போயிடுமோன்னு பயத்துல ஓடிப்போய் மொத ஆளா டைனிங் டேபிள்ல ஆஜர் ஆயிட்டா. ஆனா சும்மா சொல்லக்கூடாதுங்க. அவங்கம்மா பொண்ணுக்கு புடிச்ச மாதிரி கோழி கொழம்புல நிறைய கோழிக்கால் (எத்தனைன்னு என்ன ரெண்டு கை + ரெண்டு கால்ல இருக்கற விரல் எல்லாம் பத்தலை ) போட்டு வெச்சிருந்தாங்க. சாப்பிட்டு முடிச்சிட்டு கொஞ்சம் வெடி (பொட்டு வெடி தான் ) வெடிச்சிட்டு நம்ம ப்ளாக் மக்கள பத்தி எல்லாம் கொஞ்சம் கதை அடிச்சிட்டிருக்கும் போது அவங்கம்மாவுக்கு ஒரு போன் வந்துடுச்சு.

"காயத்ரி, அடுப்புல டீ டிக்காஷன் போட்டிருக்கேன். கொதிச்சதும் பால் கலந்து கொண்டுவா எல்லாரும் சேந்தே குடிக்கலாம்" ன்னு சொல்லிட்டு போன் பேச போய்ட்டாங்க.

நமக்கோ அம்மணி போடற டீய பத்தி தான் தெரியுமே. ரிஸ்க் எடுக்கனுமான்னு உள்ளுக்குள்ள ஒரு பயம். அந்த பீதிய அதிகப்படுத்தற மாதிரி அவளும் "அம்மா டம்ளர்ல டிக்காஷன் ஊத்திட்டேன். பால் ஊத்த இடமே இல்ல. என்னம்மா பண்றது?" ன்னு சவுண்ட் உடறா. ஆஹா. இந்த டீய குடிச்சா நாம ஊரு போய் சேர முடியாதுன்னு நமக்கு தெளிவா விளங்க, அவங்ககிட்ட மதியம் சாப்பிட்டதே ஃபுள்ளா இருக்கு. டீயெல்லாம் ஏதும் வேண்டாம்னு சொல்லி மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்.......

இந்த வருஷம் தீபாவளி கொண்டாடற எல்லாருக்கும் + ஸ்பெஷலா தலை தீபாவளி கொண்டாடற நம்ம அம்பி, கேகே, பொற்கொடி, பத்மப்ரியா, ஆலிவ்ஆயில், ப்ரியநேரம் ப்ரியா, ரம்யா, மணி ப்ரகாஷ் போன்ற புதுமணத் தம்பதிகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


முக்கியமான விஷயத்த சொல்ல மறந்துட்டேனே. போன பதிவா போட்டிருந்த கற்றது தமிழ் கதைய எழுதினது ஹரீஷ் :-))