நானும் கடவுள் நம்பிக்கையும்

எங்க வீட்ல யாரை கேட்டாலும் இவளா.. இவளுக்கு கடவுள் நம்பிக்கைனா கிலோ என்ன விலைன்னு கேட்பானு தான் சொல்லுவாங்க.. ஏன்னா அவங்களுக்கு கடவுள் நம்பிக்கைனா தினமும் காலைல எழுந்து வீட்ல பூஜை பண்ணனும்.. கோவிலுக்கு போகனும்.. நல்ல நாள் திருநாள்னா விரதம் இருக்கனும்... இப்படி சில பல வரைமுறைகள்.. ஆனா இதெல்லாம் எனக்கு எப்போ செய்யனும்னு தோணுதோ அப்போ தான் செய்வேன்.. யாராவது இதை நீ கண்டிப்பா செய்யனும்னு சொன்னா.. நீ என்ன சொல்றது.. நான் கண்டிப்பா அதை செய்யவே மாட்டேன்னு வீம்பு பண்ணுவேன்... இப்படி அவங்க படுத்தின பாட்டுல நான் செய்யவே மாட்டேன்னு முறுக்கிக்கிட்ட விஷயங்கள் தான் மேல சொன்ன கோவிலுக்கு போறது, வீட்ல பூஜை பண்றது, விரதம் இருக்கறது எல்லாம்.

மாமியார் ஊருக்கு போனாலும் கூட நான் சமையல் வேலைலாம் பாத்துக்கறேன்.. இந்த பூஜை வேலை மட்டும் நீ பாத்துக்கோப்பானு என் வீட்டுக்காரர் தலைல கட்டிருவேன். நமக்கு வாச்சவர் மட்டும் என்ன லேசுபட்ட ஆளா.. நான் பூ போடறது பூஜை பண்றதெல்லாம் பண்ணிடறேன்.. நீ இந்த விளக்க மட்டும் ஏத்தி குடுத்துட்டு போன்னு நம்மள தட்டி குடுத்தே அவரும் காரியத்தை சாதிச்சுக்குவாரு.. கேடி ஃபெல்லோ 😉😉 இவங்க கிட்ட எல்லாம் இப்படி சீன் போட்டாலும் எனக்கு எப்பவுமே என் கடவுள் பிள்ளையார் என் கூடவே இருந்து வழி நடத்தறார்ங்கறதுல அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை..

எப்போ வீட்டை விட்டு கிளம்பினாலும் எஙகள் தெருவில் இருக்கும் விநாயகருக்கு மனசுக்குள்ளயே ஒரு சல்யூட் அடிச்சிட்டு தான் கிளம்புவேன்.. அதே போல் அலுவலகத்தில் ஒரு குட்டி பிள்ளையார் சிலை  என் லேப்டாப் மேல இருக்கும். ஏனோ அந்த குட்டி சிலைய பாத்துட்டிருந்தாலே எந்த பிரச்சனையையும் சமாளிச்சிடலாம்னு ஒரு நம்பிக்கை வந்துடும். என் நம்பிக்கையின் நாயகனாய் விளங்கும் தும்பிக்கை விநாயகனுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ;)



0 Responses